இன்று திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தி வைத்து பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான நான்கு கட்சி கூட்டணியில், திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்பட 16 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இதற்கான வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டு விட்டனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்பட வேண்டும்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்த வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம், புரசைவாக்கம் தாணா தெருவில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றிலும் மின் விளக்கு அலங்காரம், மற்றும் அண்ணா, பெரியார், கலைஞர் மின்விளக்கு கட்-அவுட்களும் இடம் பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான பேர் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு அன்பழகன் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திக தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆ கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் திமுககூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.