சொத்து குவித்த வழக்கு- தங்கபாலுவுக்கு நோட்டீஸ்
சேலம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு தங்கபாலுவுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் செயலாளர் பழனிவேலு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, 1984 முதல், 90 வரை ராஜ்யசபாவிலும், 91 முதல் 96 வரையிலும், 2004- முதல் தற்போது வரையிலும் மக்களவையிலும் உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். தற்போதும் அதன் தலைவராக உள்ளார்.
1993 ஆண்டு முதல் 96 வரை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் பாராளுன்ற உறுப்பினராவதற்கு முன்பு அவருக்கு எந்த வருமானமும் கிடையாது. ஆனால் தற்போது அவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
தங்கபாலு, தனது மனைவி ஜெயந்தி, மகன் கார்த்திக், மாமனார் தசரதன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
அத்துடன், அறக்கட்டளை பெயரிலும் பல இடங்களில் சொத்து வாங்கியுள்ளார். அவருக்கு சொந்தமாக 3 கல்லூரிகள், கிரானைட் கம்பெனி உள்பட 6 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
அவர் வருமானவரி தாக்கல் செய்த போதும், வருவாய் இழப்பு என்று கூறியிருக்கிறாரே தவிர, லாபத்தை குறிப்பிடவில்லை.
குறிப்பாக, கடந்த 2004 ஆம் ஆண்டு சொத்து குறித்த பிரமாணப் பத்திரத்தில் தங்கபாலு குறிப்பிட்ட சொத்து மதிப்புக்கும், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்ட சொத்து மதிப்புக்கும் அதிக அளவு வேறுபாடு உள்ளது.
அத்துடன், தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி பெயரில் மெகா டிவி என்ற டிவியையும் அவர் நடத்தி வருகிறார்.
இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கும், சிபிஐயிடம் புகார் செய்தேன். ஆனால், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இந்த புகார் குறித்து சிபிஐ விசாரிக்காமல் உள்ளது.
எனவே, அவர் மீதான புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சுகுணா பரிசீலித்தார். இறுதியில், மனு குறித்து ஒருவார காலத்துக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கும், தங்கபாலுவுக்கும் நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.