தென்காசி சிபிஐ வேட்பாளருக்கு எதிராக தலித்கள் போஸ்டர்
சங்கரன்கோவில்: தென்காசி தனி தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லிங்கத்திற்கு எதிராக சங்கரன்கோவிலில் தலித் பிரிவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு மள்ளர் மீட்பு களம் என்ற அந்த அமைப்பு சார்பில் சங்கரன்கோவிலில் 2 விதமான போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
அதில், தென்காசி தொகுதியில் 3 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களை கொண்ட தேவேந்திரர்களின் உரிமையை தடுத்து 30 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் சமுதாயத்திற்கு வாய்ப்பளித்து ஜனநாயகத்தை மீறி சர்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் இந்திய கம்யூ கட்சியே வேட்பாளரை மாற்று. வேட்பாளரை மாற்றாமல் தேவேந்திரர் குடியிருப்புக்குள் நுழையாதே என்று ஒரு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில் மள்ளர்களின் தொகுதியாக விளங்கும் தென்காசி தொகுதியை மாற்று சாதியினரின் தொகுதியாக்கிய இந்திய கம்யூ கட்சியின் அயோக்கியதனத்தை வீழ்த்துவோம். தா.பாண்டியனின் சாதி வெறித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவண் தமிழ்நாடு மள்ளர் மீட்பு களம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்தினர்.