ஈழம்-காங். அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
சென்னை: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரி்க்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைவரையும் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் தற்போது பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் கடந்த 6 நாட்களாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 3 பெண்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களில் பலர் நேற்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.
பெண்கள் கடும் கோபத்துடன் திரண்டு வருவதைப் பார்த்து சத்தியமூர்த்தி பவனில் இருந்த நிர்வாகிகள் வெளி கேட்டை இழுத்து மூடி விட்டனர்.
மேலும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கேட்டுக்கு வெளியே உட்கார்ந்து பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர்.
சோனியாகாந்தியே போரை நிறுத்து என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண்களில் சிலர் கேட்டை திறந்து கொண்டு உள்ளே புக முயன்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சுலோசனா, அன்னாள், சகாயமேரி ஆகியோர், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 5 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் 5 பெண்கள் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
போராட்டம் நடத்தி வரும் எங்களை யாரும் பார்க்க வரவில்லை. சோனியாகாந்தி தலையிட்டு இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும். சோனியாகாந்தியை சந்திக்கும் வாய்ப்பை கே.வி.தங்கபாலு ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
அப்போது காங்கிரஸ் தரப்பில், காங்கிரஸ் தலைவர் வெளியே சென்றிருப்பதாகவும், நீங்கள் நாளைக்கு வந்து சந்தியுங்கள். இப்போது நீங்கள் இங்கிருந்து போகலாம என்றனர்.
உடனே கோபமடைந்த பெண்கள், ஓட்டு வாங்க வரும் போது மட்டும் தேடி வருகிறீர்கள். நாங்கள் தேடி வந்தால் வெளியே பிடித்து தள்ளுகிறீர்களா என்று ஆவேசமாக கூறினர்.
இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். அப்போது அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீஸாரை வைத்து பெரும் போராட்டத்திற்குப் பின்னர் பெண்களை போலீஸார், வலுக்கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றினர்.
அப்போது சில பெண்கள் வேனில் ஏற மறுத்து கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் காங்கிரஸ் நிர்வாகிகள், கைப்பட ஒரு கடிதம் கொடுங்கள். அதை டெல்லியில் கொடுத்து சோனியா காந்தியை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.
இதையடுத்து பெண்கள் அங்கேயே அமர்ந்து கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தனர்.
பின்னர் அனைத்துப் பெண்களையும் கைது செய்த போலஸீஸார் சமுதாயக் கூடம் ஒன்றுக்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் மாலை 6 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுவரை காங்கிரஸ்காரர்களின் போராட்டம் காரணமாக அல்லோகல்லப்பட்டு வந்த சத்தியமூர்த்தி பவன் பெண்கள் போராட்டம் காரணமாக பரபரப்பாகிக் கிடந்தது.