தென்காசியில் கிருஷ்ணசாமி-புதிய தமிழகம் 6 தொகுதிகளில் போட்டி
நெல்லையில் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, தேசிய லீக் ஆகியவை சார்பில் சமூக ஜனநாயக கூட்டணி ஏற்பட்டுள்ளது.
இதில் புதிய தமிழகம் கட்சி நெல்லை, தென்காசி (தனி), தூத்துக்குடி விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும், தேசிய லீக் கட்சி திருச்சியிலும் போட்டியிடுகின்றன.
மற்ற தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணியில் சேருவது தொடர்பாகவும் சில அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும். புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகளில் தென்காசி நான் போட்டியிடுகிறேன்.
மற்ற 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. 20ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுக்களை நாங்கள் 24ம் தேதி தாக்கல் செய்கின்றோம். இதுவரை நடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் என யாரும் எந்த திட்டதையும் மக்களுக்கு போராடி பெற்று தரவில்லை.
புதிய தமிழகம் தென்காசியில் வெற்றி பெற்றால் மக்கள் வளர்ச்சிக்காக பாடுபடும். எங்கள் பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இருக்கும்.
இலங்கை தமிழருக்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. தேர்தல் பணி, மனு தாக்கல் காரணமாக நெல்லை உள்ளிட்ட 100 ரயில்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொகுதி சீரமைப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதி தென்காசிக்கு மாற்றப்பட்டதால் கூடுதல் பலம். இதனால் தென்காசி தொகுதியில் எனது வெற்றி உறுதியாகிவிட்டது என்றார் கிருஷ்ணசாமி.