நெல்லை வேட்பாளரை எதிர்த்து காங். பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
நெல்லை: நெல்லை தொகுதியில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு மீண்டும் சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரசில் நெல்லை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ்கோடி ஆதித்தன எம்பி ஆதரவாளர்கள் விரக்தி அடைந்தனர். சுமார் 100 பேர் நேற்று கருப்பு கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இரண்டாம் நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. எம்பியின் ஆதரவாளர்கள் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் தலைமையில் காங்கிரஸ் அலுவலக வாசலில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
மாலையில் சேரன்மகாதேவி வட்டார காங்கிரஸ் முன்னாள் செயலாளர் பத்தமடை சுப்பிரமணியன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அவரை கையை பிடித்து இழுத்து சென்றனர்.
தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சீட் கொடு, சீட் கொடு என்று கத்தி கொண்டே அவர் காரில் ஏறி எஸ்கேப்பனார். உண்ணாவிரத போராட்டம் குறித்து தனுஷ்கோடி ஆதித்தன் எம்பி ஆதரவாளர்கள் கூறுகையில், முதல்வர் கருணாநிதியே தனுஷ்கோடி ஆதித்தனை பரிந்துரை செய்தும் ஊனமுற்றவர் என்று கூறி மேலிட தேர்வு குழு அவரை நிராகரித்துள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமசுப்பு வாழப்பாடி காங்கிரசில் இருந்தார். அவர் எப்போது காங்கிரசில் இணைந்தார் என்பதே பலருக்கு தெரியாது.
தமிழகம் முழுவதும் சிட்டிங் எம்பி்க்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் மட்டும் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்றனர்.
இதேபோல திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டமானை எதிர்த்து அங்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று லட்சுமி என்ற மகளிர் காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications