இலவச ஹெல்மட் தரக் கூடாது - தேர்தல் ஆணையம் தடை
சென்னை: ஹெல்மட் அணியாமல் பைக்குகளில் செல்பவர்களுக்கு சமூக சேவை நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மட் வழங்கப்படும் என்ற சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஷகில் அக்தர் சமீபத்தில் ஹெல்மட் அணியாமல் பைக்குகளில் செல்பவர்களுக்கு சமூக சேவை நிறுவனத்துடன் இணைந்து இலவச ஹெல்மட் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
தலா ரூ. ஆயிரம் மதிப்பு கொண்ட இந்த ஹெல்மட்டை சுமார் 4 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
இதையடுத்து இது வாக்காளர்களை கவரும் நடவடிக்கை, இந்த அறிவிப்பின் மூலம் ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு இலவச அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்றி இலவச அறிவிப்பு வெளியிட கூடாது என்பதால் கூடுதல் போலீஸ் கமிஷ்னர் ஷகில் அக்தரின் இந்த அறிவிப்பை வெளியிடும் முன்னர் அவர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பெற்று அறிவித்தாரா, மிகப்பெரிய தொகையை தேர்தல் சமயத்தில் ஒரு சமூக சேவை அமைப்பு அவசரமாக வெளியிட வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுவும் வாக்காளர்களை கவர பயன்படுத்தப்படும் இலவச உத்திகளில் ஒன்று என எதிர்கட்சிகள் சில தலைமை தேர்தல் ஆணையாளரிடம் புகார் கொடுக்க போவதாக தெரிவித்தது.
இந்நிலையில் நரேஷ் குப்தா, தலைமை தேர்தல் ஆணையாளரிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக காவல் துறை டிஜிபிக்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும் நரேஷ் குப்தா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலவச ஹெல்மட் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்றார் நரேஷ் குப்தா.
மே 13ல் தமிழகத்தில் பொது விடுமுறை...
இதற்கிடையே, மே 13ம் தேதியன்று ஊதியத்துடன் கூடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழநாட்டில் வரும் மே 13ம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை அல்லது வணிகப்பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.