இரண்டாம் கட்ட தேர்தல்-நாளை 141 தொகுதிகளில் பிரசாரம் ஓய்கிறது
டெல்லி: நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 141 தொகுதிகளில் பிரசாரம் ஓய்கிறது. இங்கு வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. கடந்த 16ம் தேதி முதல் கட்ட தேர்தலில் கேரளா, ஆந்திரா, உத்தர பிரதேசம் மாநிலங்களை 124 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்கு 48 மணி நேரம் முன்பாக அதாவது நாளையுடன் பிரசாரம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் பிரசாரம் விறுவிறுப்பாக நடக்கிறது.
மணிப்பூரில் 22ல் தேர்தல்...
ஏப்ரல் 23ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பொது விடுமுறை என்பதால் அங்கு தேர்தல் ஒரு நாள் முன்னதாக வரும் 22ம் தேதி நடக்கிறது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 141 தொகுதிகளில் 2,041 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 121 பேர் மட்டுமே பெண்கள். அதிகபட்சமாக கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூர் தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் 25, ஆந்திராவில் 20, கர்நாடகா மற்றும் உத்தர பிரேதச்த்தில தலா 17, பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் 13, ஒரிசா மற்றும் அசாமில் தலா 11, ஜார்க்கண்டில் 8, கோவா மற்றும் திரிபுராவில் தலா 2, காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் தலா 1 தொகுதிகளில் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த 141 தொகுதிகளில் காங்கிரஸ் 117, பாஜக 113, பகுஜன் சமாஜ் 122, சிபிஐ 17, தேசியவாத காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.