பிரதமர் பதவியை ஏற்கத் தேவையான தகுதிகள் ஜெ.வுக்கு உண்டு: வைகோ
சென்னை: பிரதமராக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் ஜெயலலிதாவுக்கு தான் இருக்கிறது. தேர்தலுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தால் அவர் பிரதமராக குரல் கொடுப்பேன் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டியில்,
ஈழத் தமிழர்களை கொல்லும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர் நிறுத்தம் கோரியும் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் முன்வரவில்லை.
தேர்தலுக்கு முன்னர் போரை நிறுத்தாவிட்டால் இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காங்கிரசும், சோனியாவும் தான் காரணம். இந்தியா நினைத்து இருந்தால் எப்போதோ போரை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
ஜெயலலிதா வல்லமை பொருந்திய தலைவர். அவர் தனது சிந்தனைகளை வெளியிட பல மொழிகளில் பேசுகிறார். பிரதமர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளையும் அவர் பெற்றுள்ளார். தேர்தலுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்தால் அவரை பிரதமராக்க குரல் கொடுப்போம்.
நாளை தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். நான் நாஞ்சில் சம்பத் வழக்கில் ஆஜராவதால் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்.
வெல்லப் போவது பணமா... பிணமா...
எங்கள் பிரசாரத்தை முடக்குவதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், பண பலத்துக்கும் நடப்பது. வெல்லப்போவது பணமா? இலங்கையில் செத்து மடியும் தமிழர்களின் பிணமா? என்பது தான் முழக்கமாக அமையும்.
அனைத்து பிரச்சினைகளிலும் தோழமை கட்சிகளிடம் ஒரே மாதிரியான அணுகுமுறை இருக்காது. பாஜகவோடு அதிமுக மற்றும் திமுக தோழமை கொண்டு இருந்தது. அப்போது சில கொள்கைகளில் மாறுபாடு இருந்தது.
அதே போல் தான் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தோழமையில் சில கொள்கைகளில் மாறுபாடு இருந்தது. இது போல தான் தற்போது சேது சமுத்திர திட்டத்தில் எங்களுக்கும், அதிமுகவுக்கும் சில கொள்கை மாறுபாடுகள் உள்ளன. ஜனநாயக ரீதியில் இந்த மாறுபாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான்.
அண்ணாவின் கனவு பலிக்க வேண்டும்...
சேது சமுத்திரதிட்டத்தை பொறுத்தவரை சிறிய கப்பல்கள், செல்லும் வகையில் தான் இப்போது கால்வாய் தோண்டப்படுகிறது. ஆனால் பெரியகப்பல்கள் செல்லும் வகையில் சேது கால்வாய் அமைய வேண்டும் என்பது அண்ணா கண்ட கனவு. எனவே பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
அதே நேரத்தில் மத உணர்வுகளை புண்படுத்தாத வகையில் மாற்று வழியை ஆலோசிக்கலாம். மீனவர்களின் அச்சத்தையும் நீக்கி விட்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைகோ.