பிரசார ஸ்டைலை மாற்றிய ஜெ. - தொண்டர்கள் உற்சாகம்
தேர்தல் பிரசாரம் என்றால் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு சகல வசதிகளும் நிரம்பிய வேனில் கிளம்பி விடுவார் ஜெயலலிதா.
ஊர் ஊராக அந்த வேனில் சென்று, வேனில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்வார். ஏற்கனவே எழுதி வைத்து கொண்டு அதையே அனைத்து ஊர்களிலும் பேசுவார்.
ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசாரம் சுத்தமாக மாறிப் போய் விட்டது.
வேனை அவர் முற்றிலும் விட்டு விட்டார். அதற்குப் பதிலாக ஹெலிகாப்டரில்தான் அனைத்து இடங்களுக்கும் போகிறார். ஒரு நாளைக்கு 2 ஊர்கள் என்ற வீதம் அவர் பிரசாரம் செய்கிறார்.
தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜெயலலிதா, இரவு மதுரையில் தங்கிக் கொள்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தான் பிரசாரம் செய்யும் ஊர்களுக்குச் செல்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் ஏறி பிரசாரம் செய்கிறார்.
வழக்கமான பிரசாரம் போல இல்லாமல், புத்தம் புதிதாகவும் நிறையப் பேசுகிறார். முதல் நாள் தனது பிரசாரத்திற்கு திமுக தரப்பிலோ அல்லது காங்கிரஸ் தரப்பிலோ ஏதாவது விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்குப் பதிலும் அளிக்கிறார்.
எழுதி வைத்துக் கொண்டு வாசித்தபடி வேன் வலம் வந்த அம்மா இப்போது மேடை ஏறி பிரசாரம் செய்வதை அதிமுகவினர் வரவேற்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் இமேஜை உயர்த்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜெ. பிரசார திட்டத்தில் மாற்றம்
இதற்கிடையே, மேட்டுப்பாளையம், கோவை, கரூர், திருச்சி ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வருகிற 2-ம் தேதி கரூர், திருச்சியில் பேசுவதாக சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு இருந்தது. 3-ம் தேதி மேட்டுப்பாளையம், கோவையில் பேசுவதாக இருந்தது.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுற்றுப்பயண திட்டத்தில் 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
2-ந் தேதி (சனிக்கிழமை) மேட்டுப்பாளையம் (நீலகிரி தனி தொகுதி) சென்று பகல் 2.45 மணிக்கு பேசுகிறார். அதன் பிறகு அன்று மாலை 4 மணிக்கு கோவையில் பேசுகிறார். இதேபோல் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு (கரூர் தொகுதி) கரூரில் பேசுகிறார். அன்று மாலை 3.45 மணிக்கு திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.