இலங்கைப் பிரச்சினையில் ஜெ.வை முந்தும் முயற்சியே கருணாநிதியின் பேச்சு: சோ, சாமி
சென்னை: இலங்கைப் பிரச்சினையில் எங்கே ஜெயலலிதா பெயரைத் தட்டிச் சென்று விடப் போகிறாரோ என்ற பயத்தில்தான் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார் கருணாநிதி என்று பத்திரிக்கையாளர் சோ மற்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளனர்.
என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி குறித்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவை விட நல்ல பெயர் வாங்க வேண்டும் என துடிக்கிறார் கருணாநிதி.
இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். அதை விட பெரிதாக பேசினால்தான் ஜெயலலிதாவை விட நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் கருணாநிதி.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனை பகத் சிங், நேதாஜி என்று புகழ்ந்தார் கருணாநிதி. இப்போது அந்த பழைய காலத்திற்கே அவர் திரும்பியுள்ளார் என்றார்.
சுப்ரமணியம்சாமி கூறுகையில், தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவை விட நல்ல பெயர் வாங்கும் முயற்சியே கருணாநிதியின் இந்த திடீர் பேச்சு.
கருணாநிதி சொல்வது போல பிரபாகரனுக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்பு இல்லை. ஆனால் தமிழர்களின் உணர்வுகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாகவே இவ்வாறு பேசியுள்ளார் என்றார்.