எல்டிடிடி தீவிரவாத இயக்கம்-பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி: பிரதமர்
பிரபாகரன் எனது நண்பர், அவர் கொல்லப்பட்டால் வருத்தமடைவேன் என்று முதல்வர் கருணாநிதி, என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
கருத்து தெரிவிக்க மறுப்பு...:
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பிரதமர், ஏற்னவே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் இதுகுறித்து பேசி விட்டார். இதற்கு மேலும் இதை விவரித்துப் பேச நான் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
பிரதமர் நிலையில் மாற்றம்:
ஆனால் இன்று, பிரபாகரன் ஒரு தேடப்படும் குற்றவாளி. விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம். பிரபாகரன் ஒரு தேடப்படும் குற்றவாளி. அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழக முதல்வர் இதுகுறித்து தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் காங்கிரஸ் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார் மன்மோகன் சிங்.