பிரபாகரன் மீது தனிப்பட்ட வெறுப்பில்லை: பிரியங்கா
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும். அதேசமயம், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
சிஎன்என்: மக்கள் உங்களை இந்திரா காந்தியாக பார்க்கிறார்கள்..
பிரியங்கா: மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
சிஎன்என்: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்..
பிரியங்கா: எப்போதும் பிரியங்காவாகவே இருக்க விரும்புகிறேன்.
சிஎன்என்: உங்களுக்குள் உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாயல் இருப்பதாக நினைக்கிறீர்களா..
பிரியங்கா: அவர் எனது தந்தை. இந்திரா காந்தி எனது பாட்டி. அவர்களுடைய பாதிப்பு எனக்குள் இருக்கிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு தனியான மனுஷியாக காணப்பட விரும்புகிறேன்.
சிஎன்என்:உங்களது குருவாக யாரை நினைக்கிறீர்கள்.
பிரியங்கா: எனது குடும்பத்தில், எனது தாயார் உள்பட மூன்று காந்தியுமே எனக்கு குருக்கள்தான்.
சிஎன்என்: உங்களது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரை உதாரண புருஷராக நினைக்கிறீர்கள்..
பிரியங்கா: மகாத்மா காந்தி.
சிஎன்என்: அதனால்தான் நளினியை மன்னிக்கும் மனப்பக்குவம் கிடைத்ததா..
பிரியங்கா: நளினியும், நானும் மனிதர்கள். மனித குலத்தின் இயல்பே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதுதான்.
சிஎன்என்: பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
பிரியங்கா: இது ஒரு தனிப்பட்ட, அரசியல் பிரச்சினை. அதை நான் அரசியல் ரீதியாக அனுக விரும்புகிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த கோணத்தில் பார்த்தால், பிரபாகரனை மன்னிக்க முடியாது. ஆனால் மனிதாபிமான கோணத்தில் பார்த்தால், அவர் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும் இல்லை. அவருக்கு எதிராக கோபமோ, துவேஷமோ இல்லை, நிச்சயமாக இல்லை.
சிஎன்என்: கருணாநிதி போன்ற காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள், பிரபாகரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனரே..
பிரியங்கா: தான் பேசியதை கருணாநிதி வாபஸ் பெற்று விட்டாரே..
சிஎன்என்: கருணாநிதியின் பேச்சை சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே..
பிரியங்கா: இது அரசியல் பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
சிஎன்என்: ராஜீவ் அரசியலுக்கு வந்ததை சோனியா விரும்பவி்லை. சோனியா அரசியலுக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. நீங்களும் அதேபோன்ற சூழலில்தான் அரசியலுக்கு வருவீர்களா..
பிரியங்கா: அப்படியெல்லாம் இல்லை. நான் சற்று வித்தியாசமான பெண். எனக்கு எப்போது வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் வருவேன் என்றார் பிரியங்கா.