வேட்பு மனுக்கள் குவிந்தன - ஒரே நாளில் 165 பேர் மனு தாக்கல்
சென்னை: நேற்று நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் 165 வேட்பு மனுக்கள் தாக்கலாகின.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
ஆனால் 17, 18 ஆகிய நாட்களில் அஷ்டமி, நவமி வந்ததாலும், 19ம் தேதி அரசு விடுமுறை என்பதாலும் வேட்பு மனுக்கள் அவ்வளவாக தாக்கல் ஆகவில்லை. மொத்தமே 52 மனுக்கள்தான் தாக்கலாகியிருந்தன.
ஆனால் நேற்று சித்தயோகத்துடன் கூடிய சுப முகூர்த்த நாள் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களைக் குவி்த்து விட்டனர்.
அதிமுக கூட்டணியினர் ..
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளின் வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர்கள் கட்சி மேலிடம் கணித்துக் கூறியிருந்த பிற்பகல் 12.20 முதல் 1.10 வரையிலான நேரத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மதிமுகவைச் சேர்ந்த வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் மட்டும் நேற்று மனு தாக்கல் செய்யவில்லை. வைகோ 23ம் தேதி விருதுநகரில் மனு தாக்கல் செய்கிறார்.
மற்றபடி அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அத்தனை பேரும் மனுத்தாக்கல் செய்து விட்டனர்.
திமுக கூட்டணியினர் ..
அதேபோல திமுக கூட்டணி வேட்பாளர்களும் நல்ல நாளான நேற்று மனு தாக்கல் செய்தனர்.
மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி மனு தாக்கல் செய்தார்.
திமுக, அதிமுக கூட்டணியினர் தவிர தேமுதிக வேட்பாளர்கள் பலரும் கூட நேற்று மனு தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 165 மனுக்கள் தாக்கலாகின. நேற்றுடன் இதுவரை 217 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சலசலப்பு ..
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தபோது தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜேந்திரனுடன், பொன்னையன், வளர்மதி, டாக்டர் மைத்ரேயன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், செந்தமிழன் எம்.எல்.ஏ., பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாபு, கந்தன்சாவடி கந்தன் ஆகியோர் வந்திருந்தனர்.
அனைவரும் தேர்தல் அதிகாரியின் அறைக்குள் புகுந்தனர். ஆனால் தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி, வேட்பாளருடன் 3 பேரை தவிர, மற்றவர்களை வெளியேறுமாறு கூறினார்.
உடனே, மைத்ரேயன், நாங்கள் மாற்று வேட்பாளருக்கும் மனு தாக்கல் செய்ய வந்துள்ளோம். எனவே, எங்களுடன் 6 பேரை அனுமதியுங்கள் என்று கூறினார்.
அதற்கு தேர்தல் அதிகாரி, மாற்று வேட்பாளரை அடுத்து மனு தாக்கல் செய்ய சொல்லுங்கள். வேட்பாளருடன் 4 பேரை தவிர மற்றவர்கள் வெளியே செல்லுங்கள்'' என்று கூறினார். அதற்கு மைத்ரேயன், எங்களிடம் காட்டும் இதே நடைமுறையை, நாளையும் கடைபிடிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு தேர்தல் அதிகாரி, தேர்தல் விதிமுறை எல்லோருக்கும் ஒன்றுதான் என்று கூறினார். அதன் பின்னர், போலீசாரை அழைத்து, கூடுதலாக உள்ளே நின்றவர்களை வெளியேற்றுமாறு கூறினார்.
உடனே, இன்ஸ்பெக்டர் பாண்டியன் தேர்தல் அதிகாரி அறைக்குள் வந்து, வேட்பாளருடன் 4 பேரை தவிர, மீதமுள்ளவர்களை வெளியே செல்லுமாறு கூறினார். இதைக்கேட்டு கோபமடைந்த வளர்மதி, ஒரு எம்.எல்.ஏ.வை எப்படி கை நீட்டி பேசலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உள்ளே புகுந்த பொன்னையன் அனைவரையும் அமைதிப்படுத்தி வெளியே போகச் செய்தார்.
டெபாசிட் கட்டிய 92 வயது தியாகி ..
தென்சென்னை தொகுதியில் போட்டியிட காமராஜர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திரதாஸ் மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது டெபாசிட் தொகையை 92 வயது தியாகியான ஜெகதீசன், தனது தியாகி பென்ஷன் பணத்திலிருந்து கொடுத்தார்.
24ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 27ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications