'நடிகர்களை நம்பி ஓட்டு போட்டு ஏமாறாதீர்கள்'
கரூர்: வரும் மக்களை தேர்தலில் நடிகர் நடிகைகளை நம்பி ஓட்டுப்போடாதீர்கள் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு பேசினார்.
கொங்கு இளைஞர் பேரவை மகளீர் அணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரூரில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.
அப்போது, கரூர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்வேந்தனை அறிமுகம் செய்து வைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு பேசுகையில்,
கடந்த 60 ஆண்டுகளாக கொங்கு இனம் அடிமை இனமாகவே உள்ளது. இப்போது கொங்கு மகளீர் இடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது கண்டு பெருமையாக உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நடிகர்கள், நடிகைகள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருவார்கள். அவர்களை நம்பி ஓட்டு போட்டு ஏமாந்துவிடதாதீர்கள். அவர்களால் நாட்டிற்கு எந்த நல்லதும் நடைபெற்றது கிடையாது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மொழி உணர்வு, சமுதாய உணர்வு இருக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும். அடிப்படை வசதிகளை பெறவும், சுய மரியாதையேடு வாழவும் நமது வேட்பாளர் கார்வேந்தனை ஆதரியுங்கள் என்றார்.