சீட்டே வேண்டாம்...காங். வேட்பாளர் கார்வேந்தன் 'கதறல்'!
திருப்பூர்: காங்கிரஸ் கட்சி்யின் கோஷ்டி மோதல் பிரச்சினையால் நொந்து போயிருக்கும் திருப்பூர் வேட்பாளர் கார்வேந்தன் எனக்கு சீட்டே வேண்டாம். ஆளை விடுங்கள் என ஆவேசமாகிக் கத்தினார்.
தமிழக காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளின் எண்ணிக்கை எண்ணுவது சற்று கடினமான காரியம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு முடிவு எடுத்து மேலிடத்தை மட்டுமல்ல அடிமட்ட தொண்டர்களையும் குழப்பி விடுவார்கள்.
சாதாரண விஷயத்துக்கே வேட்டியை கிழித்து மல்லுகட்டும் இவர்கள் தற்போது தேர்தல் சமயத்தில் சும்மா இருப்பார்களா என்ன? வழக்கம் போல் தங்களை வேலைகளை ஆரம்பித்து விட்டனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பல இடங்களில் வேட்பாளர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
சேலத்தில் தங்கபாலுவுக்கு எதிராக கட்சியினர் மேடையை முற்றுகையிட்டனர். திருச்சி வேட்பாளராக மேயர் சாருபாலா நியமிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் பெண் உறுப்பினர் தீக்குளிக்க முயன்றது என பரபரப்பான சம்பவங்களால் தமிழகத்தில் காங்கிரஸ் கப்பல் தள்ளாடி வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்வேந்தன், அந்தியூர் வருவதாக தகவல் கொடுத்தார். இதையடுத்து வாசன் கோஷ்டியை சேர்ந்த மூப்பனார் பேரவை நிர்வாகிகள் தவிட்டுபாளையத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு கார்வேந்தன் மாலை அணிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையறிந்து கொண்ட இளங்கோவன் கோஷ்டியினர் அந்தியூர் எல்லை பகுதிக்கு சென்று கார்வேந்தனை தங்களது வாகனத்தில் அழைத்து வந்தனர். தவிட்டுபாளையம் அருகே வாசன் கோஷ்டியினர் காரை பார்ததவுடன் பட்டாசு கொளுத்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், இளங்கோவன் கோஷ்டியினர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து கோபமடைந்த வாசன் கோஷ்டியினர் மூப்பனார் சிலைக்கு தாங்களே மாலை போட்டுவிட்டனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த வேட்பாளர் கார்வேந்தனை நோக்கி ஒழிக... ஒழிக என கோஷமிட்டனர்.
மூப்பனார் சிலைக்கு மாலை அணிவிக்கிறேன் என கார்வேந்தன் கூறியதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அங்கு இருந்த இளங்கோவன் கோஷ்டியினருக்கும் மற்றும் வாசன் கோஷ்டியினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் உருவானது.
இதையடுத்து கார்வேந்தன் மூப்பனார் பேரவை அலுவலகத்துக்கு வருகிறேன் என்று கூறியதையடுத்து வாசன் கோஷ்டியினர் கலைந்து சென்றனர். மூப்பனார் பேரவை அலுவலகத்துக்கு சென்ற கார்வேந்தன் அங்கிருந்த பேரவை நிர்வாகிகளை சமாதானம் செய்தார். ஆனால், தொண்டர்கள் தொடர்ந்து முடிந்த பிரச்சினையை குறித்தே கேள்வி எழுப்பினர்.
இதனால் கடுப்பாகி போன கார்வேந்தன், எனக்கு இந்த சீட்டே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். நான் இந்த பதவியை கேட்டேனா... மேலிடம் கொடுத்ததால், இந்த பிரச்னையை எல்லாம் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது என புலம்பி தள்ளிவிட்டார்.
காஞ்சிபுரம் வேட்பாளர் யார்?:
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். கோஷ்டிப் பூசலால் காஞ்சீபுரம் (தனி) தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் முடிவாகவில்லை.
ஸ்டேட் வங்கி இயக்குனர்களில் ஒருவரான விஸ்வநாதன், வள்ளல் பெருமான், திருவீதி, ராசிபுரம் எம்.பி.ராணி, மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியா, யாசோதா எம்எல்ஏ, காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் கண்ணன் என சுமார் 120 பேர் இந்த சீட்டைக் கேட்டு தங்கள் கோஷ்டி தலைவர்கள் மூலம் டெல்லியை நெருக்கி வருகின்றனர்.
இதனால் வேட்பாளரை இன்னும் இறுதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது காங்கிரஸ் மேலிடம்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளதால் 3 நாளுக்குள் பெயரை அறிவித்துவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!!!.












Click it and Unblock the Notifications