சிட்டி வங்கி: விக்ரம் பண்டிட் சபதம்!
நியூயார்க்கில் நேற்று நடந்த பங்குதாரர் கூட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் பண்டிட், வங்கியின் இன்றைய நெருக்கடி குறித்து கோபத்துடன் பேசிய பங்குதாரர்களுக்கு வங்கியின் நிலைமையை பொறுமையாக விளக்கினார்.
சிட்டி வங்கியின் தலைமைப் பொறுப்பு கடந்த 2007-ல் வந்தார் விக்ரம் பண்டிட். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டது சர்வதேசப் பொருளாதாரத்தில். இதனால் வங்கியை லாபப் பாதைக்கு மாற்றிய பிறகே சம்பளம் பெற்றுக் கொள்வேன் கூறியிருந்தார் விக்ரம்.
இப்போது அமெரிக்க அரசிடம் 45 பில்லியன் டாலர் பெற்று நெருக்கடியைச் சமாளித்துள்ளது சிட்டி வங்கி.
இந்த நிதியில் ஒரு டாலர் கூட பாக்கியில்லாமல் அமெரிக்க அரசுக்கு சிட்டி வங்கி திருப்பி செலுத்தும் வகையில் வங்கியை லாபப் பாதைக்கு மாற்றுவேன் என்று விக்ரம் பண்டிட் மீண்டும் உறுதி கூறினார், தங்களது முதலீட்டாளர்களிடம்.
சில தினங்களுக்கு முன்புதான் சிட்டி வங்கியின் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தார் விக்ரம். ஓராண்டு நஷ்டத்துக்குப் பிறகு முதல் முறையாக 1.59 பில்லியன் டாலர்கள் லாபம் காட்டி, சிட்டி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் இந்த அணுகுமுறை காரணமாக சிட்டி வங்கியின் பங்குகள் செவ்வாய் கிழமையன்று 10 சதவிகித லாபத்தில் கைமாறின.