மாயாவதியின் புகார் ஆதாரமற்றது-நவீன் சாவ்லா
டெல்லி: நானும், தேர்தல் ஆணையர் குரேஷியும் காங்கிரஸுக்கு சாதகமாக செயல்படுவதாக உ.பி. முதல்வர் மாயாவதி கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.
நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்துள்ளதன் மூலம் இந்தத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அவரும், தேர்தல் ஆணையர் குரேஷியும் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் ஏஜென்ட்டாக மாறி விட்டது என்று மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.
இதை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் மறுத்தார் நவீன் சாவ்லா. செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதே மாயாவதிதான் 2007ம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து, உ.பியில் சட்டசபைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் ஆணையம் நடத்தியது என்று பாராட்டிப் பேசினார் என்றார் சாவ்லா.
பாஜக ஆட்சியைப் பிடித்தால் உங்களை மாற்ற முயற்சிப்போம் என பாஜக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த நவீன் சாவ்லா, அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. எதிர்ப்புகளிலிருந்து தேர்தல் ஆணையம் நிறைய கற்றுக் கொள்கிறது. எங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. சீரியஸாகவே பார்க்கிறோம். அதிலிருந்து பலம் பெறுகிறோம் என்றார் சாவ்லா.