தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யலாம்
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சற்றே ஆறுதலாக , இன்றும், நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் அக்னி நட்சத்திரம் வரவில்லை. ஆனால் வந்தால் என்னாகுமோ என்ற பேரச்சத்தில் தமிழகம் உள்ளது. காரணம், இப்போதே மண்டையைப் பிளக்கும் பயங்கர வெயில்தான்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் வெயில் வெளுத்துக் கட்டுகிறது. இருப்பினும் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து அப்பகுதி மக்களை குஷிப்படுத்தி வருகிறது.
இதேபோல சேலம், எடப்பாடி தலா 6 செ.மீ.மழை பெய்துள்ளது. புதுச்சத்திரம், நாமக்கல், உசிலம்பட்டி, வேடச்சந்தூர், மேல்பவானி தலா 3 செ.மீ.மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தியைக் கூறியுள்ளது.
இதுகுறித்து அது கூறுகையில், 23-ம்தேதி காலை வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அதே போல தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமாம்.
நேற்றும் செம வெயில்..
நேற்றும் சென்னையில் கடும் வெயில் அடித்தது. பகலில் அனல் காற்றையும் மக்கள் சந்திக்க நேர்ந்தது. இரவு நெடு நேரம் வரை வெயிலின் தாக்கம் குறையாததால் மக்கள் புழுக்கத்தில் நெளிந்தனர்.
மீனம்பாக்கத்தில் நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி வெயிலும், நுங்கம்பாக்கத்தி்ல 98 டிகிரி வெயிலும் பதிவானது.
மதுரையில் ஜி்ல் ஜில்...
அதே நேரத்தில் மதுரையில் நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
இதனால் ஆரப்பாளையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியது. அவனியாபுரம் பகுதியில் பனிக்கட்டியுடன் மழை பெய்தது.
கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி ரோடு அகத்தாபட்டியில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் இருந்து மக்கள் தப்பினர்!.












Click it and Unblock the Notifications