கிருஷ்ணசாமி...'சமத்துவ' தொகுதியாக மாறிய தென்காசி
தென்காசி:
-இசக்கி ராஜன்
பாஜக, சமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தென்காசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இரு பிரிவினர் மோதல் நடக்கும் பகுதி என்று கருதப்பட்டு வந்த தென்காசி இதன்மூலம் ஒற்றுமையான சமத்துவ தொகுதியாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள சரத்குமாரின் சமகவிற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சரத்குமார் தங்கள் கட்சி தென்காசிக்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் என்றும், தென்காசியில் புதிய தமிழகத்துக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சரத்குமாரின் இந்த அறிவிப்பு தென்காசி தொகுதி மக்களையும், அரசியல்வாதிகளையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாஜக சற்று வலுவாக உள்ள தொகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியும் ஓன்று. ஆனாலும் பாஜக அதை சமகவுக்கு விட்டுக் கொடுத்தது. தற்போது அங்கு சமக, புதிய தமிழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தென்காசி பாஜகவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொகுதியில் தனித்து நின்று கடந்த தேர்தலில் சுமார் 1 லட்சம் ஓட்டுகளை பெற்ற டாகடர் கிருஷ்ணசாமி இம்முறை சமக, பாஜக, ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளை கலங்க வைத்துள்ளது.
மேலும் தென்காசி என்றாலே இரு பிரிவினர் மோதல் நடக்கும் பகுதி என்ற கருத்தை மாற்றும் விதமாகவும், சமத்துவ தொகுதியாக மாற்றிடும் புதிய முயற்சியாகவும் இந்த கூட்டணி அமைந்துள்ளது மக்களிடம் வரவேற்பை உருவாக்கியுள்ளது.
கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சி பிரமுகர்களிடம் ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, துளியளவும் சிறு அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைவரும் ஓழுக்கத்தோடும், கட்டு கோப்போடும் பணியாற்றினால் வெற்றி பெருவது எளிது என்று தெரிவித்தாராம்.












Click it and Unblock the Notifications