யாருக்கு ஆதரவு மே 5ல் முடிவு-வாணிகர் சங்கம்
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது வரும் மே 5ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் 26வது மாநாடு வரும் மே 5ம் தேதி வேலூரில் நடக்கிறது. இந்நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள கிருஷ்ண மகாலில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வணிகர் சங்கம், ஜாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை மே 5ம் தேதி தெரிவிப்போம். இதற்காக சில கோரிக்கைகளை மாநாட்டிற்கு முன்பே அறிவிக்க உள்ளோம்.
ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். சுவீஸ் நாட்டில் உள்ள ரூ.73 லட்சம் கோடியில் பெரும்பகுதி பணம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு வந்த பணம் தான். பெப்சி, கோகோ கோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.
சர்வதேச சந்தையி்ல் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இங்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை குறைக்க வேண்டும்.
இதனை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். இதுகுறித்து பரிசீலனை செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவி்ன் பரிந்துரைபடி வேலூர் மாநாட்டில் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்போம் என்றார் அவர்.