தென்காசியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது
தென்காசி: தென்காசி பகுதியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனையோட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி படையினர், போலீசார் மற்றும் உளவுபிரிவினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி, புளியரை, கடையநல்லூர், வடகரை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் கள்ள துப்பாக்கிகளின் புழக்கம் இருப்பதாக உளவுதுறையினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் டிஐஜி கண்ணப்பன், நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் உத்தரவின் பேரில் தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் தனிப்படையினர் தென்காசி, புளியரை, குற்றாலம், வடகரை உள்பட பல பகுதிகளில் கள்ள துப்பாக்கி சம்பந்தமாக தேடுதல் வேட்டை துவங்கினர்.
அப்போது போலீசார் சந்தேகத்திடமாக சுற்றி கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கள்ள துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களுக்கு கள்ள துப்பாக்கிகளை சப்ளை செய்தது யார்... வேறு யார் யாருக்கு கள்ள துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் நக்சல்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா...என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கள்ள துப்பாக்கிகள் பிடிபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.