பட்டினியில் தமிழர்கள்-சென்றது நிவாரண கப்பல்
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக ரூ. 6.46 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு எம்வி கிரீன் மாறல் என்ற கப்பல் நேற்று இலங்கை புறப்பட்டது.
விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என சொல்லி கொண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று வருகிறது. பாதுகாப்பு பகுதியில் இருக்கும் தமிழர்களும் ராணுவத்தின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அவர்கள் உணவும், மருந்தும் இல்லாமல் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதையடுத்து தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான ரூ. 10 கோடி மதிப்பிலான அத்திவாசிய பொருட்களை கப்பலில் அனுப்பியது. அது செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பியுள்ளது. எம்.வி.கிரீன் மாறல் என்ற கப்பல் ரூ. 6.46 கோடி மதிப்பிலான 936 டன் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு இலங்கை நோக்கி நேற்று புறப்பட்டது.
இதில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்புகள், உணவு மூட்டைகள், பாத்திரங்கள், நைட்டி, லுங்கி, டவல், பெட்ஷீட் ஆகியவை ஒரு குடும்பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் 40 ஆயிரம் மூட்டைகளாக கட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த கப்பல் நாளை 24ம் தேதி இலங்கை சென்றடையும். பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் நிவாரணப் பொருட்கள் பத்திரமாக சேர்க்கப்படும்.
பட்டினியால் வாடும் மக்கள்..:
போர் பகுதியில் இருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கு தங்குவதற்கு இடமோ, போதிய உணவோ வழங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்யவில்லை.
ராணுவம் வழங்கிய உணவு பொட்டலங்கள் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே இவை போதுமானதாக இருந்தது. அவற்றை பெறுவதற்கு தமிழர்கள் முண்டியடித்தனர். ஏராளமானோருக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பட்டினி கிடந்து வருகின்றனர்.
தப்பி வந்தவர்களில் பெரும்பாலானவர்க் குழந்தைகளும், பெண்களும் என்பதால் உணவின்றி தவிக்கும் அவர்கள் நிலைமை காண சகிக்க முடியாத நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை வவுனியா பகுதிக்கு கொண்டு சென்று முகாம்களில் தங்க வைத்தனர். வசதிகள் ஏதும் இல்லாமல் அந்த முகாம்களில் இருந்து மக்களை வெளியேறவும் ராணுவம் அனுமதிக்கவில்லை. முள் வேலி அமைத்து ராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்.
இதே போன்று முகாம்களை அமைத்து இப்போது தப்பி வந்தவர்களையும் தங்க வைக்க ஏற்பாடு நடப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications