வேட்பு மனு..தமிழகத்தில் நாளையே கடைசி நாள்
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் வேட்பு மனு செய்ய நாளையே கடைசி தினமாகும்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தவிர, அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாளாகப் பார்த்து கடந்த 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பல திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 468 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளே.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை 60 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வட சென்னை தொகுதியில் 14 பேரும், மத்திய சென்னையில் 19 பேரும், தென் சென்னையில் 27 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கலுக்கு நாளையே கடைசி நாளாகும். நாளை மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடையும். எனவே, நாளை ஏராளமானோர் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடு்த்துக் கொள்ளப்படும். மனுக்களைத் திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
பொன்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்..
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோர் நாகர்கோவிலில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.