போர் நிறுத்தம் கோரி அமைச்சரை அனுப்பும் பிரிட்டன்
லண்டன்: தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை நிறுத்தவும், போர் நிறுத்தம் செய்யவும் வலியுறுத்தி, இலங்கை அரசை நேரில் கேட்டுக் கொள்வதற்காக அமைச்சர் ஒருவரை இங்கிலாந்து அனுப்புகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், இலங்கையில் தற்போது மிக மிக அவசிய தேவை மனிதாபிமான உதவி நடவடிக்கைகள்தான். இதற்கு முதலில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
இதை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்திக் கூறுவதற்காக அமைச்சர் ஒருவர் கொழும்புக்கு அனுப்பப்படுவார்.
அதேபோல, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவும் கொழும்பு செல்ல அனுமதிக்கப்படும். அங்கு என்ன மாதிரியான மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் தேவை என்பதை இந்தக் குழு கண்டறியும்.
எம்.பிக்கள் குழு வருகைக்கு ராஜபக்சே அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். எம்.பிக்கள் குழு பயணத்திற்கு முன்பாக சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் இந்த வாரத்தி்ல கொழும்பு செல்வார்.
விரைவில் அங்கு வன்முறை முடிவுக்கு வந்து, அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கைகள் குறித்து நானும், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் பிரவுன்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து இங்கிலாந்து அரசு காக்க வேண்டும் என்று கோரி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications