அழகிரி, திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்தனர்.
மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி, திமுகவினருடன் ஊர்வலமாக தேர்தல் அதிகாரியின் அலுவலகமான மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆட்சித் தலைவர் சீத்தாராமனிடம் அவர் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
இதேபோல, வட சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல பிற திமுக வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்னொரு முக்கிய கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் 20ம் தேதியே மனு தாக்கல் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாநிதி மாறன் மனு தாக்கல்..
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ஜோதி நிர்மலாவிடம் மனு தாக்கல் செய்தார்.
தென் சென்னை வேட்பாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூரில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக்கண்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.
கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார்.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சாமித்துரை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் நாகர்கோவிலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பணம் கொடுத்த திமுகவினர்-பிடித்து வைத்த மக்கள்:
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடம் சிவகங்கை தொகுதியில் அவருக்கு ஓட்டளிக்கக் கோரி சாலை கிராமத்தில் பணம் கொடுக்க வந்த திமுகவினரை மக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.