திருப்பூரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கூலித் தொழிலாளி தீக்குளித்து மரணம்
திருப்பூரில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (42). கூலித் தொழிலாளி. இலங்கையில் நடைபெறும் போரால் தினசரி அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதை சகிக்கமுடியால் சுப்பிரமணி தவித்து வந்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், அங்கு போரில் தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற வேண்டியும் இன்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிய சுப்பிரமணி தீவைத்துக் கொண்டார்.
தீ உடல் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சுப்பிரமணியின் உடல் முழுக்க தீ பரவி எரிந்தது போனது. இதில் அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்..
இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டதாகவும், அதனால் இம் முறை பொது மக்கள் அதிமுகவிற்கு ஓட்டளிக்க வேண்டுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
இந்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சுப்பிரமணி தீக்குளிப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணிக்கு நிர்மலா என்ற மனைவியும், ராகுல்(20), அருண்ராஜ் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவருக்கு சொந்த ஊர் பண்ருட்டியாகும்.
தீக்குளிக்க வேண்டாம்.. ஜெ:
இந் நிலையி்ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக யாரும் உயிர்துறக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து அவர் பேசுகையில், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய வேலை நிறுத்தம் இலங்கைத் தமிழர்களுக்காக அல்ல. சிவகாசி, மதுரையில் நடக்கும் எனது பிரசாரத்தை முடக்கவே.
வேலை நிறுத்தத்தைக் கண்டித்து அதிமுக தொண்டர் பண்ருட்டி மணி தீக்குளித்து உயிர் நீத்துள்ளார். அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பை நானும், கட்சியும் வழங்குவோம்.
உயிர்த் தியாகம் செய்தவருக்கு நிதி அளிக்கப்படும். ஆனால், இத்தகைய செயலில் யாரும் ஈடுபடக் கூடாது.
ஹிந்தி எதிர்ப்பை வைத்து தன்னை வளர்த்துக்கொண்ட கருணாநிதி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டோரின் குடும்பத்தினருக்கு உதவவில்லை என்றார் ஜெயலலிதா.