தமிழர்களைக் காக்க சீக்கிய அமைப்பு கோரிக்கை
அமிர்தசரஸ்: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீக்கிய அமைப்பான தள் கல்சா கோரிக்கை விடுத்துள்ளது.
சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையான காலிஸ்தான் கோரிக்கைக்கு முன்பு ஆதரவு தெரிவித்த அமைப்பு தள் கல்சா. அமிர்தசரஸிலிருந்து அது செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தள் கல்சா அமைப்பின் அரசியல் விவகாரப் பிரிவு செயலாளர் கன்வர்பால் சிங் இதுகுறித்து கூறுகையில், ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் சர்வதேச சமுதாயம் ஈடுபடவில்லை. இதனால் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகிறது.
இது ஐ.நா.வின் கோட்பாடுகளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் செயல். இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமாக அமையும் என கூறியுள்ளார்.
மேலும், ஐ.நா. சபை உடனடியாக அப்பாவித் தமிழர்களைக் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு பிட்டா பாராட்டு..
இதற்கிடையே, தீவிரவாதிகளுக்கு எதிராக ராஜபக்சே அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனவே ராஜபக்சேவை நான் பாராட்டுகிறேன். நேரில் போயும் அவரைப் பாராட்டி, விருது கொடுத்துக் கெளரவிக்கப் போகிறேன் என்று எம்.எஸ்.பிட்டா கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் தனது கால்களை இழந்தவர் பிட்டா. பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர். இவரைக் கொல்ல பலமுறை சதிகள் நடந்துள்ளன. அவற்றிலிருந்து தப்பி வருபவர் பிட்டா. முன்பு காங்கிரஸில் இருந்தார். தன்னைக் கொல்ல நடந்த சதிச் செயல்களின் விளைவாக அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்.
இவர் இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தீவிரவாதிகளை ஒழிக்க ராஜபக்சே அரசும், இலங்கை ராணுவமும் சிறப்பாக செயல்படுகின்றன.
உலகிலேயே சிறந்த ராணுவமாக இலங்கை ராணுவம் மாறியுள்ளது. ராஜபக்சே அரசையும், அந்நாட்டு ராணுவத்தையும் நான் பாராட்டுகிறேன். நேரில் போயும் அவரைப் பாராட்டி, விருது கொடுக்கப் போகிறேன் என்கிறார் பிட்டா.












Click it and Unblock the Notifications