எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் - பிரியங்கா காந்தி
இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..
எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது.
நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.
தமிழர்கள் புத்திசாலிகள்...
தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.
அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன்.
இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.