தமிழகத்தில் 334 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று முடிவடைந்தது. மொத்தம் 334 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை மாலைக்குள் வேட்பு மனுக்ளை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொத்தம் தாக்கலான வேட்பு மனுக்களில் 941 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 334 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 27ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை மாவட்டத்தில், மொத்தம் 49 வேட்பாளர்களின் மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. 116 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அனைத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மத்திய சென்னையில் மொத்தம் 62 மனுக்கள் தாக்கலாகின. இதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன.
தென் சென்னையில் 62 மனுக்கள் பெறப்பட்ன. 48 ஏற்கப்பட்டன. 14 நிராகரிக்கப்பட்டன.
வட சென்னையில் 41 மனுக்கள் பெறப்பட்டன. 31 ஏற்கப்பட்டன. 10 நிராகரிக்கப்பட்டன.
நெல்லை..
நெல்லை, தென்காசி தொகுதிகளில் 33 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நெல்லை, பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சைகளும் மொத்தம் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்பட 14 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இநதிய கம்யூ, காங், தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் சேர்த்து 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 12 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளும், சுயேட்சைகளும் சேர்ந்து மொத்தம் 32 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மாற்று மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 16 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கன்னியாகுமரியில்...
கன்னியாகுமரியில், 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இத்தொகுதியில் 39வது முறையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரானின் வேட்பு மனு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால் நிராகரிக்கப்பட்டது.
(இவர் திருவனந்தபுரம் தொகுதியில் ஏப்ரல் 16ம் தேதி நடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)
கோவையில்..
கோவையில், 39 மனுக்கள் பெறப்பட்டன. 29 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பொள்ளாச்சி தொகுதியில், 29 மனுக்கள் பெறப்பட்டன. 24 ஏற்கப்பட்டன.
மதுரையில்..
மதுரையில் 29 மனுக்கள் பெறப்பட்டன. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்றவை ஏற்கப்பட்டு விட்டன.
ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால், அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்படும் என்றார் நரேஷ்குப்தா.