Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. உயிருக்கு ஆபத்தாம்.. அதனால் ஹெலிகாப்டரில் பிரசாரமாம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தீவிரவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரசாரம் செய்யும் இடங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று வருகிறேன் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டரும் மூலம் பறந்து பறந்து வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தர்மபுரியில் பாமக வேட்பாளர் செந்திலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய அவர் கூறுகையில்,

கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு, உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், தி.மு.க-வும் இணைந்த மத்திய அரசால், நீங்கள் அடைந்த பயன் என்ன?

பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர்ப் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு - இவைகள் தான் மத்திய அரசு இந்நாட்டு மக்களுக்கு அளித்துள்ள பரிசுகள். மத்திய அரசின், நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்கும் தான் இதற்கெல்லாம் காரணம்.

அழிவு பாதையில் அழைத்து செல்கிறார்...

தமிழகத்தில் மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்தல் என, பல்வேறு அராஜகங்களை, நிகழ்த்திக் கொண்டிருக்கிறது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. அதோடு மட்டும் அல்லாமல், மின்சாரத்திற்கு விடுமுறையும் அளித்து, தமிழ் நாட்டை அழிவுப் பாதையில், அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

இவர்களுக்கு, வரும் மே மாதம், 13-ந் தேதி அன்று நடைபெறவிருக்கும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும்...

கடும் கோடை காலத்திலும் என்னை காண பெருமளவில் திரண்டு வந்திருக்கும் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி, வெயிலில் உங்களை நிற்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்று வருந்துகிறேன்.

இந்த சிரமத்திற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். வெயிலில் நீங்கள் வேதனைப்படுவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. வெயிலில் உங்களை சிரமப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமும் அல்ல, விருப்பமும் அல்ல.

நீங்கள் வாழும் இடங்களிலேயே உங்களை வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது உள்ள விருப்பம். அப்படித்தான் இதுவரை உங்களை நான் சந்தித்து வந்துள்ளேன்.

ஆனால், இப்பொழுது, இந்த தேர்தல் பிரசார பயணத்தில் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சில பயங்கரவாத அமைப்புகள் என்னை குறி வைத்து இருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாகவே, மத்திய அரசின் உள்துறை மூலமாக எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்தல் பயணத்தின்போதே, என்னை எப்படியும் தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்று, சில தீவிரவாத சக்திகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது என்று, மத்திய அரசே எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

எனவே, உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. என் மீது தாக்குதல் நடத்தப்படுவது பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.

இருப்பது ஒரு உயிர். அது போவதும் ஒரு முறை...

இருப்பது ஒரு உயிர். அது போவதும் ஒரு முறை. அது மக்களோடு நான் இருக்கையில் போவதில், எனக்கு மகிழ்ச்சி தான்.

ஆனால், அத்தகைய ஒரு தாக்குதல் தீவிரவாதிகளால் என் மீது நடத்தப்பட்டால், என்னோடு சேர்ந்து எண்ணற்ற அப்பாவி பொதுமக்களும் பலியாக நேரிடுமே? அந்தக் கவலையில் தான், நான் இத்தகைய பகல் நேர தேர்தல் சுற்றுப் பயண பொதுக்கூட்ட ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட தூரம் சாலை வழியாக வாகனங்களில் நான் பயணம் செய்தால், போதிய பாதுகாப்பு தருவது இயலாத காரியம் என்றும், கூடுமானவரையிலும், இரவு நேர பிரசாரப் பயணங்களை, பொதுக் கூட்டங்களை தவிர்க்குமாறும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காரணங்களினால் தான், நான், இப்படி விமானம் மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் வந்து, பகல் நேரங்களில் உங்களை எல்லாம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கள் இறக்க அனுமதி...

பனை மரத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து ஓர் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, அந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்...

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கியமான பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றும், இதற்கு மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினால் ஒரு தீர்மானம் 27.3.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டது.

அதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தனது முழு ஆதரவை அளித்தது. இந்தத் தீர்மானத்துடன் ஒரு சில வாசகங்களை சேர்த்து முதலமைச்சர் கருணாநிதி, ஏப்ரல் 1, 2008ம் தேதி அன்று மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதற்கும் நாங்கள் ஆதரவு அளித்தோம். அதன் பின்னர், கருணாநிதி திடீரென யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறுத்தப்படுகிறது என்ற அளவில், 5.4.2008 அன்று சட்டமன்றத்திற்கு வெளியே அறிவித்தார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பொறுத்த வரையில், கர்நாடகத்தினுடைய தயவோ, அனுமதியோ தமிழகத்திற்குத் தேவையில்லை. ஒகேனக்கல் தமிழ் நாட்டிற்குள் தான் இருக்கிறது. நமக்கு வருகின்ற காவேரி நதி நீரைத் தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.

பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் போது, நாம் ஏன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது? ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதை உங்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றவும், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றைப் போக்கவும், தொழில் உற்பத்தியைப் பெருக்கவும், அதிமுக தலைமையிலான கூட்டணியை, என்று உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+