வேட்பாளருக்கு மிரட்டல்-ப.சி. மகன் மீது புகார்
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக போட்டியிடும் முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்களை சிதம்பரத்தின் மகன் கார்த்திக் மிரட்டியதாகவும், அவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக இலங்கை தமிழருக்காக சமீபத்தில் சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் நினைவாக துவக்கப்பட்டுள்ள முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் ராஜீவ் காந்தி என்பவர் போட்டியிடுகிறார்.
அவர், சிதம்பரத்தின் மகன் தன்னை மிரட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
வாக்காளர் பட்டியலில் எனது பெயர் ராஜீவ் என்று இருக்கிறது. ஆனால், ராஜீவ் காந்தி என்று நான் வேட்புமனு தாக்கலில் பதிவு செய்துள்ளதால், எனது மனுவை ஏற்க கூடாது என கார்த்திக் சிதம்பரம் தேர்தல் அதிகாரிகளிடம் விவாதம் செய்தார்.
ஆனாலும், எனது வேட்புமனு ஏற்கப்பட்டது. இதையடுத்து அவர் என்னை தொகுதியை விட்டு ஓடிவிடுமாறு மிரட்டினார். இல்லையென்றால் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
எங்கள் அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலையில் அவர்களில் 13 பேர் சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடி பகுதி சந்தையில் மக்களிடம் துண்டு பிரசுரம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் அவர்கள் மீது கல் வீசியுள்ளனர். இதையடுத்து போலீசார் வந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், திடீரென்று இரவு 7.30 மணிக்கு அவர்களை புதுக்கோட்டையில் உள்ள கங்கா நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது இபிகோ 188, 147, 153, 504, 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறுகையி்ல், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அவரது பெயர் ராஜீவ் காந்தி அல்ல. நான் அவரிடம் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் தான் பேசினேன். அங்கு தேர்தல் பார்வையாளர்களும் இருந்தனர் என்றார் கார்த்திக் சிதம்பரம்.