அட்சய திருதியை விற்பனை 40% சரிவு!
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் அதிகமாக தங்கம் சேரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்த நாளுக்கு மவுசு கூடி வருகிறது. நகைக் கடைக்காரர்களும் பல கோடி ரூபாய் செலவழித்து மக்களின் இந்த நம்பிக்கையை முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர்.
நெருக்கியடித்த கூட்டம்...
நேற்று அட்சய திருதியை நாள் என்பதால் புரசைவாக்கம், தி.நகர், பாரிமுனை, அண்ணாநகர் போன்ற இடங்களிலுள்ள நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, தாம்பரம் போன்ற பகுதிகளிலும் இப்போது பிரபல நகைக் கடைகள் கிளை பரப்பியுள்ளன. இங்கும் அதே நிலைதான்.
கோவை, திருப்பூர் மற்றும் மதுரை நகர நகைக் கடைகளிலும் சென்னைக்கு இணையான நெரிசலைக் காணமுடிந்தது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1000 கிலோ தங்கம் விற்பனையானது.
விற்பனை சரிவு...
ஆனால் விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 முதல் 40 சதவிகிதம் வரை குறைவாகவே இருந்ததாக மும்பை தங்க மார்க்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதனை சர்வதேச கோல்டு கவுன்சிலும் ஒப்புக் கொண்டுள்ளது.
குறிப்பாக கோவை நகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகித விற்பனை சரிவு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததும், மக்களின் வருமானம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சி அடைந்ததும் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனையை பாதித்துள்ளதாக உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஜிதேந்திரா கூறுகிறார்.
கடந்த இரு வாரங்களாக இறங்குமுகத்திலிருந்த தங்கம் விலை அட்சய திருதியை முன்னிட்டு நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.1381-க்கு விற்பனையானது.