சிறையில் கோபால கிருஷ்ணன் - டிரவுசரை வாங்கியதும் கதறினார்!
சென்னை: 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்தியன் வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு, சரவண பவன் ராஜகோபால் உள்ள அறைக்கு எதிர் அறை தரப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கான டிரவுசர், சட்டை அவரிடம் தரப்பட்டபோது கதறி அழுதாராம்.
1993-ம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த பிஜே என்ற பைப் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 8.86 கோடியை மும்பை கிளை மூலம் வழங்கப்பட்டது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவதற்கு வங்கி கேட்ட குறைந்தபட்ச ஆவணங்களைக் கூட, பிஜே நிறுவனம் இந்தியன் வங்கியில் சமர்ப்பிக்கவில்லை.
பல வழக்குகளில் கோபால கிருஷ்ணன் சிக்கிக் கொண்ட போது, இந்த கடன் வழங்கலின் பின்னணியிலிருந்து மோசடி குறித்தும் சிபிஐ விசாரித்தது. சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. நேற்று அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரெங்கராஜன் வழங்கினார்.
போதிய ஆவணங்கள் இன்றி முறையற்று இந்தக் கடன் வழங்கப்பட கோபாலகிருஷ்ணன் முதன்மைக் காரணமாக இருந்துள்ளதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் கடனை வழங்கிய அப்போதைய மும்பை கிளையின் மேலாளர் சண்முகராஜனுக்கும் 14 ஆண்டு தண்டனையும், ரூ. 80 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நேற்று மாலை 3 மணிக்கு கோபாலகிருஷ்ணன் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
தண்டனை பெற்ற கைதிகளுக்கு சிறையில் நம்பரும், அரைக்கால் டிரவுசர் மற்றம் சட்டையும் தருவார்கள். அதன்படி கோபாலகிருஷ்ணனுக்கும் டிரவுசர், சட்டை தரப்பட்டது.
அதை வாங்கிய கோபாலகிருஷ்ணன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாராம்.
பின்னர் சிறைக் காவலர்கள், கோபாலகிருஷ்ணனை அவரது அறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். தனி செல்லில் கோபாலகிருஷ்ணன் அடைக்கப்பட்டுள்ளார்.
இரவு அவருக்கு சப்பாத்தி தரப்பட்டதாம். தரையில் படுத்துத் தூங்கினார் கோபாலகிருஷ்ணன்.
கோபாலகிருஷ்ணன் இருக்கும் அறைக்கு நேர் எதிரில் உள்ள அறையில்தான் சரவண பவன் ராஜகோபால் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications