லஞ்சம்-பாஸ்போர்ட் பெண் அதிகாரி ஜாமீன் மனு
சென்னை: டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்க லஞ்சம் வாங்கியதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிந்திரன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரியாக உள்ள சுமதி ரவிச்சந்திரன், டிராவல்ஸ் நிறுவனங்கள் வழியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் வாங்கி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் சுமதி மற்றும் அவரது கணவர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தும் பாத்திமா, முசாபர், ராஜூ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் இவர்கள் அனைவரும் தாங்கள் நிராபரதி என்றும், தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
சுமதி செய்துள்ள மனுவில்,
நான் நேர்மையான அதிகாரி. இதனால் மூத்த அதிகாரிகள் என்னை பாராட்டி பல பொறுப்புகளை என்னிடம் கொடுத்துள்ளனர். அதை நான் சிறப்பாக செய்து வந்தேன். யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை.
டிராவல்ஸ் ஏஜென்சியிடம் யாரோ பணம் கொடுத்ததாக புகார் உள்ளது. ஆனால், அதற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. எனது மாமனாருக்கு வயது 82 ஆகிறது. மேலும் எனது அம்மாவும் படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டியுள்ளது.
என்னை எனது கணவரையும் கைது செய்திருப்பதால், அவர்களை கவனிக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எங்களது இரு மகள்களும் நாங்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
எல்லாமே ஆவணங்கள் அடிப்படையில்தான் பரிவர்த்தனை நடந்துள்ளது. எனவே என்னை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நாகநாதன் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் நிலையில், சுமதியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications