சுயேட்சைகளுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கு நேற்று சின்னம் ஒதுக்கப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் பல வேட்பாளர்கள் தங்களுக்கு ஒரே சின்னம் வேண்டும் என கேட்டதை அடுத்து குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, நேற்று வேட்பாளர்களின் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டது.
தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும் 110 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அதிகபட்சமாக தென் சென்னையில் 44 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அங்கரீக்கப்பட்ட வேட்பாளர்களை தவிர்த்து மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நேற்று நடந்தது.
தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு 50க்கும் அதிகமான சின்னங்களை கொடுத்து அதில் தேர்வு செய்ய கூறியிருந்தது. இதையடுத்து சில வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
ஆனால், ஒரே சின்னத்தை கேட்டு பல வேட்பாளர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சின்னம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அளிக்கப்பட்டது. பின்னர் அகர வரிசைப்படி சின்னங்கள் ஒதுக்கும் பணி நடந்தது.
தென் சென்னையில் 44 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் அங்கு சின்னம் ஒதுக்கும் பணி இரவு வரை நீடித்தது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மட்டுமே இருக்கும் என்பதால் தென் சென்னை பகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கவேண்டி உள்ளது.