விஜயகாந்த் விவசாயிகள் பக்கம்-பிரேமலதா பிரசாரம்
தூத்துக்குடி: விவசாயிகளை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மறந்துவி்ட்டனர். ஆனால், விஜயகாந்த் விவசாயிகளுக்கு உதவக் கூடியவர். அவர் எப்போதும் விவசாயிகள் பக்கம் என அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிரேமலதா, தூத்துக்குடி வேட்பாளர் சுந்தரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது மேள தாளம் முழுங்க வாணவேடிக்கையுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின் போது பிரேமலதா கூறுகையில்,
தமிழகத்தில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விஜயகாந்த் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் மற்ற கட்சிகள் பதவிக்காக கூட்டணி வைத்துள்ளனர்.
விஜயகாந்த் அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இலங்கையில் அமைதி திரும்பிய பின்னர் தேர்தலை எதிர்கொள்ளலாம் என கூறினார். ஆனால் அப்போது வேறு யாரும் வாய் திறக்கவில்லை.
தற்போது உண்ணாவிரதம் என்று நாடகமாடுகிறார்கள். தனிஈழம் வேண்டும் என்று அறிக்கை வைக்கிறார்கள்.
நாங்கள் யாரையும் குறை கூறி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. தமிழகம் விவசாய பூமி என்பதை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மறந்துவிட்டனர். அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் என எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை யாரும் தீர்த்து வைக்கவில்லை.
விஜயகாந்த் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான். அவர் முதல்வராக பதவியேற்றால் முதலில் கிராமங்களின் பக்கம் தான் கவனம் செலுத்துவார். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களோடு கூட்டணி வைத்துள்ள விஜயகாந்த் கரத்தை பலப்படுத்த சுந்தருக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications