ஒபாமாவுக்கு ஸ்வைன் ப்ளூ?-யு.எஸ்சில் பரபரப்பு
மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஸ்வைன் ப்ளூ காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளதையடுத்து அமெரிக்கா பயணத்தை தவிர்க்குமாறு ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்கா முழுவதும் ப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மெக்சிகோ நாட்டில் முதலில் ப்ளூ காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
பன்றிகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மெக்சிகோ சென்று திரும்பிய அதிபர் பாரக் ஒபாமாவுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கிய 2 நாட்களுக்குப் பின்னர் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒபாமா மெக்சிகோவில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது மெக்சிகோ தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் பிலிப்பி சொலிஸ் என்பவரைச் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு அடுத்த நாள் பன்றிக் காய்ச்சல் வந்து சொலிஸ் மரணமடைந்தார். இதனால் ஒபாமாவுக்கும் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில்,
அதிபரின் உடல் நலனில் எந்தக் குறையும் இல்லை. எந்தவித ஆபத்தும் இல்லை. அவரை டாக்டர்கள் பரிசோதித்துள்ளனர். அவரது உடலில் ஸ்வைன் ப்ளூ வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை. காய்ச்சல் தொடர்பான அறிகுறிகளும் அவரிடம் இல்லை. எனவே கவலைப்படும் படி எதுவும் இல்லை என்றார்.
இதற்கிடையே சொலிஸ் மாரடைப்பால்தான் மரணமடைந்ததாக மெக்சிகோ அரசு திடீரென கூறியுள்ளது.