ஸ்வைன் ப்ளூ-இந்திய விமான நிலையங்கள் உஷார்
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் நாட்டின் இதர பிற முக்கிய விமான நிலையங்களில் (குறிப்பாக சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களில்) 24 மணி நேர மருத்துவ பரிசோதனை மற்றும் குழுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்களில் உள்ள குடியேற்றப் பிரிவு அலுவலகங்களில் இந்த மருத்துவக் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. யாருக்காவது வைரஸ் தாக்குதல் இருப்பதாக தெரிய வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் 32 டாக்டர்கள், எட்டு நர்சுகள் கொண்ட குழு களம் இறக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவில் உள்ள 9 விமான நிலையங்களில் இந்த மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா பிரான்ஸ் போன்றவற்றிலிருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மெக்சிகோவிலிருந்து கிளம்பி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நியூசிலாந்து என பரவி வரும் ஸ்வைன் ப்ளூ காய்ச்சல், தற்போது இஸ்ரேல், ஸ்பெயின் நாடுகளிலும் பரவியுள்ளதாம்.
மேலும் பிரேசில், கெளதமாலா, பெரு, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஏழு ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்வைன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.