வியட்னாமில் கற்ற பாடத்தை புகட்டுவோம் - அமெரிக்காவை எச்சரிக்கிறது இலங்கை!
கொழும்பு: இலங்கை விவகாரத்தில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றால் வியட்நாமில் கற்றதை விட மிகக் கடுமையான பாடத்தை அமெரிக்காவுக்குப் புகட்டுவோம் என இலங்கை அமைச்சரும், சிங்கள வெறிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இன்று பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன.
எனவே பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டு வரும் அமெரிக்காவால் தெற்காசியாவில் வாலாட்ட முடியாது.
இலங்கைப் பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா முனைந்தால் வியட்னாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு நாம் புகட்டுவோம். அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.
விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கண்ணி வெடித் தாக்குதல்களுக்கு இங்கிலாந்துதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அந்த நாடு பாதுகாப்பு வழங்கியிருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் தொலைபேசி மூலம் இவற்றை நிகழ்த்தியுள்ளனர் என்று கூறியுள்ளார் சம்பிக்க.
பொருளாதாரத் தடை-யுஎஸ் அமைப்பு கோரிக்கை:
இலங்கையின் போர்க்களத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டதற்கும், மனிதாபிமான பேரவலம் ஏற்பட்டதற்கும் இலங்கை அரசே பொறுப்பு. எனவே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கையில் சமத்துவம், நிவாரணத்துக்கான மக்கள் (பியர்ல்) என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த இந்த அமைப்பு இதுதொடர்பாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த தாஷா மனோராஜன் கூறுகையில், இலங்கை அரசு தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களை அழித்து வருகிறது.
எனவே இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு பொருளாதார தடையை விதிக்க வேண்டும். ராஜ்ஜிய தடைகளையும் விதிக்க வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூறியபடி இலங்கை நடந்து கொள்ள ஐ.நா.வும் வலியுறுத்த வேண்டும். ஐ.நா. மனிதாபிமான குழுவை இலங்கையின் போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசை ஐ.நா. நிர்ப்பந்திக்க வேண்டும்.
வடக்கில் உள்ள அகதிகள் முகாம்களை சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
மனிதாபிமான குழுவை அனுமதிக்க இலங்கை அரசு தொடர்ந்து தடையாக உள்ளது. அங்கு போர் பாதித்த பகுதிகளில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் 1 லட்சம் அப்பாவித் தமிழர்கள் பேராபத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications