செளதி அரேபியாவில் 65 வயது தமிழர் மாயம்!
ஜெட்டா: தமிழகத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஜெட்டா விமான நிலையத்தில் நிராதரவாக காணப்பட்டார். தற்போது அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முதியவரின் பெயர் முகம்மது பரூக். 65 வயது இருக்கும். நேற்று அவர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச சவூதியா விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் காணப்பட்டார்.
அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது. அவரால் சரிவர பேச முடியவில்லை. மன நலமும் லேசாக பாதிக்கப்பட்டதைப் போல காணப்பட்டார்.
தான் தமிழர் என்றும், தனது முகவரி முகம்மது பரூக், எண் 2, புது தெரு, கடலாங்குடி, டி.எம்.கோவில், மயிலாடுதுறை என்று மட்டும் அவரால் சொல்ல முடிந்தது.
எங்கு வேலை பார்த்தேன் என்ன என்ற விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை.
சில மணி நேரம் விமான நிலையத்திலேயே சுற்றித் திரிந்த அந்தப் பெரியவர் பின்னர் காணவில்லை என்று ஜெட்டாவிலிருந்து தகவல் அனுப்பியுள்ளார் அங்கு வசிக்கும் நேயர் எம். மல்லப்பன். அவரது செல்போன் எண் 0503635689.
பெரியவர் குறித்து அறிந்தவர்கள் மல்லப்பனை தொடர்பு கொள்ளலாம்.