தேர்தலுக்கு பின் தனி ஈழமே முதல் வேலை-ராமதாஸ்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தனி ஈழம் அமைப்பதே தங்கள் கூட்டணியின் முதல் வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
ஈழத்தமிழர் பிரச்சனையில கருணாநிதியும், சிதம்பரமும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி மனித சங்கிலி உள்பட அவராக எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் சொல்லி செய்ததுதான்.
இலங்கையில் போரை நிறுத்த போனை எடுத்து கருணாநிதி சோனியாவிடம் பேசினாலே போதும். போரை நிறுத்தவிட்டால் கூட்டணியை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருக்கலாமே, இப்போதும் சொல்லலாமே, இப்போது போர் நின்று விட்டது என்று சொல்கிறார்கள்.
இவர் சொன்ன அன்று இரவே இலங்கையில் குண்டு மழை பொழிந்து 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழம் அங்குள்ள மக்களுக்கு அன்னை பூமி, அங்குதான் தமிழ் ஈழம் அமைப்போம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்த கூட்டணியில் வைகோ, தா.பாண்டியன் போன்றோரும் இருக்கிறார்கள். ஒத்த கருத்துள்ள நாங்கள் இணைந்திருக்கிறோம். மத்தியில் புதிய அரசு அமைந்ததும் நாங்கள் முதல் வேலையாக இதை செய்வோம்.
தலித் கிறிஸ்தவர்களுக்கு தலிக்களுக்கான உரி்மை கிடைக்க பாடுபடுவோம். அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்டது. எனவே வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். இங்கு கூடியிருக்கிற பெண்கள் ஒவ்வொருவரும் 100 பெண்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். உங்கள் பகுதியில் 90 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காக வீதிவிதியாக சென்று தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்றார் ராமதாஸ்.