என்டிடிவியில் 20% ஊழியர்கள் பணி நீக்கம்!

மேலும் பணியிருப்பவர்களுக்கு சம்பளக் குறைப்பு, சலுகைகள் ரத்து என பல்வேறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்த நிர்வாகச் செலவு மற்றும் ரூ. 731.8 மில்லியன் அளவுக்கு அதிகரித்துவிட்ட நஷ்டம் போன்றவைதான் இந்த திடீர் நடவடிக்கைகளுக்குக் காரணம் என நி்ர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் 55 ஊழியர்களை கடந்த ஏப்ரல் 26ம் தேதியே பணியிலிருந்து விலகுமாறு கடிதம் கொடுத்துள்ளது என்டிடிவி.
இவர்கள் தவிர மேலும் 20 சதவீத ஊழியர்கள் இன்றுமுதல் நீக்கப்படுகிறார்கள்.
இப்போது பணியில் உள்ள அனைவருக்குமே பேதமின்றி சம்பளக் குறைப்பு, சலுகைகள் ரத்து மற்றும் கூடுதல் நேரப் பணிக்கான ஊதிய நிறுத்தம் போன்றவற்றை அறிவித்துள்ளது என்டிடிவி. ஊழியர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
இன்று வெளியான என்டிடிவியின் நான்காவது காலாண்டு முடிவுகளின்படி, நிறுவனத்தின் நிர்வாகச் செலவு ரூ.953 மில்லியனிலிருந்து ரூ. 1.34 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் வருமானம் ரூ. 3056 மில்லியனிலிருந்து ரூ. 3096.1 மில்லியன் அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இதன்படி இந்தாண்டுக்கான நஷ்டம் ரூ.731 மில்லியனாகவும், இந்த காலாண்டின் நஷ்டம் மட்டும் ரூ.447.4 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் என்டிடிவி ரூ.428 மில்லியன் லாபம் கண்டது.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டே இந்த லே ஆஃப் மற்றும் செலவுக் குறைப்புகளை செய்துள்ளது என்டிடிவி. பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று இந்த அளவு பணியாளர்களை நீக்கிருப்பது இதுவே முதல்முறை.












Click it and Unblock the Notifications