சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சாட்டையடி கொடுங்கள்-வாசன்
தென்காசி: அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதில் இடம்பெறும் கட்சிகளுக்கு மக்கள் தேர்தலின் மூலம் சாட்டையடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியி்ல் போட்டியிடும் காங் வேட்பாளர் வெள்ளைபாண்டியை ஆதரித்து நேற்று பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர் ஜிகே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான கட்டத்தில் நடக்கிறது. இதில் அகில இந்திய அளவில் இரண்டு கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. ஒன்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணி, மற்றொன்று பாஜக தலைமையிலான மதவாத கூட்டணி.
மதசார்பற்ற காங் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்கள் மக்களை சென்று அடையும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மீண்டும் மதவாதம் தலைதூக்க நினைக்கிறது. மதவாத கூட்டணி ஒருபுறம், மதசார்ப்பற்ற கூட்டணி ஒருபுறம் உள்ளது. இதில் மாதவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்க மறந்து விடாதீர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்த கூட்டணி.
ஆனால் எதிர்முனையில் இருப்பவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். அதற்கு தமிழகத்தின் தலைவராக ஜெயலலிதா உள்ளார். ஊதுகுழலாக பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
எங்களோடு ஒரு ஆண்டு முன்பு வரை கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் பாமக கடந்த ஒரு மாதம் முன்பு கூட எங்களோடு இருந்துவிட்டு பதவி சுகம் அனுபவித்து விட்டு இன்று எதிர்முனையில் பதவி சுகம் வேண்டி உள்ளனர். அதனால்தான் கூறுகிறேன். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மறக்க கூடாது. சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சாட்டையடி கொடுங்கள்.
2004ம் ஆண்டு நீங்கள் வழங்கிய 100 சதவீத வெற்றியை நாங்கள் மறக்கவில்லை. அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான திட்டங்களை வழங்கின.
தமிழகத்திற்கு கட்டுமான பணிகளுக்கு மட்டும் 8 துறைகளில் 70 திட்டங்களாக மத்திய அரசு 56 கோடியோ 650 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முட்டுகட்டைதான் போட்டப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்தியாவை வல்லரசாக மாற்றும் என்பதில் ஐயமில்லை என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications