For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'விடியலை தரும் தெய்வ வாக்கு'- ஜெ.வுக்கு இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

பலெர்மோ: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பேசியது தங்கள் மத்தியில் விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது என இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்..

மதிப்பிற்கும் பேரன்புக்குமுரிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் அன்னை ஜெயலலிதா அவர்கட்கு:

இத்தாலி வாழ் தமிழீழ மக்களின் பணிவான அன்பு வணக்கங்கள்

தங்களுக்கு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல்

சாவின் விளிம்பில் நின்று இனவாத இலங்கை அரசின் கொடிய குண்டு மழையில் குளித்தும், எறிகணையில் எரிந்தும், கொத்தணிக் குண்டிலும் நச்சு வாயுவிலும் கொல்லப்படும் ஈழத்தமிழ் மக்களின் அவலநிலைகளையும் அவர்களின் அவலக்குரல்களையும் கேட்டு தொப்புள் கொடி உறவுகளும் உலகத் தமிழினமும் பொங்கி எழுந்து மக்களின் கண்ணீர் துடைக்க வீதியில் இறங்கி, உண்ணாநிலை இருந்து, தீக்குளித்து உரிமைக்குரல் கொடுத்து சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் வேளையில் ஈழத்தமிழர்களின் துயர் கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்து கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது.

தாய்த் தமிழகத்திலும், ஈழத்திலும் உள்ள எட்டுக் கோடி தமிழர்களோடு புலம்பெயர்ந்து வாழ்கி்ன்ற தமிழ் மக்களுக்கும் உங்கள் உறுதியான பேச்சு நம்பிக்கை ஓளியை ஏற்றியுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என்ற உங்களின் நம்பிக்கை எம்மக்கள் மீதுள்ள தமிழ்ப்பற்றையும் பாசத்தையும் காட்டி நிற்கின்றது.

தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதை சொல்லும் புரட்சித்தலைவரின் வழிவந்த புரட்சித்தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள்.

அன்று காலத்தின் கோலத்தோடு சில காட்டமான வார்த்தைகளைப் பகிர்ந்தாலும் இன்றைய ஈழத்தமிழர்களின் கோலத்தையும் அவலத்தையும் கண்டு உங்கள் உள்ளம் இறங்கி ஒரு புதிய ஒளிக்கீற்றை உருவாக்கியிக்கின்றீர்கள்.

ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் நாடகம் ஆடும் அரசியல் கலைஞர்களும் வாழும் தமிழ்நாட்டில் சொல்லிலும் செயலிலும் நேர்மையை நிலை நிறுத்தியவர் நீங்கள்.

தலைமுறை தலைமுறையாக எம்மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பங்களுக்கும் உறவுகளை இழந்து வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தாங்கள் தந்த வாக்கு விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது.

வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி கொடி நாட்டி தமிழர்களின் தலைவியாக வலம் வந்து ஈழத்தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்கி உலகத்தால் காக்க முடியாத இலட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்றிய தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் தாங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என அந்த கடிதத்தல் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X