தேர்தலில் யாருக்கு ஆதரவு?-வணிகர் சங்க பேரவை 5ம் தேதி முடிவு
ஆம்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் முடிவு நாளை மறுநாள் 5ம் தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5ம் தேதி வேலூரில் 26வது ஆண்டு மாநாடு நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்முறை எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அரசியல் கட்சியினர் மீது வணிகர்கள் வெறுப்பில் உள்ளோம். இதற்கு முன்பு நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், ஆளும் கட்சி ஆன பிறகு வணிகர்களின் கோரிக்கைகளை மறந்து விடுகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு துணை போகின்றனர்.
இப்போதைய அரசியல் கட்சி தலைவர்களுக்கு மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லை. ஆனால் தொண்டர்கள் அளவற்ற மதிப்பு வைத்துள்ளனர். தலைவர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். மக்கள் பாதிக்கப்படுகிற பிரச்சினைகளில் நேர்மையாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டும். அரசியலுக்கு எதிராக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இறங்குவது தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் ஆகும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வரவேண்டும்.
பொருட்களின் விற்பனை விலையை அச்சடிப்பது போன்று, அதிகபட்ச தயாரிப்பு செலவை அச்சடிக்க வேண்டும். பொருட்களின் மூலப்பொருட்கள் பற்றிய பட்டியலை தமிழில் அச்சடிக்க வேண்டும்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு 22 கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். அதனை ஏற்கும் அரசியல் கட்சியை பற்றி இன்று சென்னையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் ஆராயப்படும். அதன்படி வேலூரில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடக்கும் மாநாட்டில் வணிகர்கள் யாருக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் என்பதை அறிவிப்போம் என்றார் வெள்ளையன்.