கொழும்பில் பிரிட்டிஷ் சிறப்பு தூதர்-எம்பிக்களும் வருகை
கொழும்பு: இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நியமி்த்துள்ள சிறப்பு தூதரான டெஸ் பிரவுன் கொழும்பு வந்தடைந்தார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டெஸ் பிரவுனை சிறப்பு பிரதிநிதியாக கார்டன் பிரவுன் கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தார்.
இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இங்கிலாந்து தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என அரசுத் தரப்பிலும், எதிர்க்கட்சிகள், சிங்கள கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான சிறப்பு பிரதிநிதி என்ற பெயரில் டெஸ் பிரவுனை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அந்த நாட்டு அரசு கூறியது. அதேசமயம், பிரிட்டிஷ் எம்.பிக்கள் குழுவுடன் இணைந்து டெஸ் பிரவுன் வரலாம் எனவும் அது கூறியது.
இதையடுத்து டெஸ் பிரவுன் உள்ளிட்டோர் அடங்கிய இங்கிலாந்து எம்.பிக்கள் குழு ஒன்று கொழும்பு வந்துள்ளது.
இந்தக் குழுவில் ஜான் பெர்கோ, மால்கம் ப்ரூஸ், எட்வர்ட் மெக்கார்டி, முகம்மது சர்வார் ஆகிய எம்.பிக்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கன்சர்வேடிவ், லிபரல் ஜனநாயகக் கட்சி, தொழிலாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் ஆவர்.
கொழும்பு கிளம்பும் முன் லண்டனில் பெர்கோ பேசுகையில், இலங்கையில் தற்போது நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலைமை எந்த அளவுக்கு கடுமையாக உள்ளது என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
நாங்கள் இலங்கையின் நண்பர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியுள்ளது. அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம் என்றார்.
கொழும்பில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து எம்.பிக்கள் வடக்கில் இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.
மேலும், இலங்கை அரசுத் தரப்புடனும் மனிதாபிமான நெருக்கடி நிலைமை குறித்து விவாதிக்கவுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளிடம் இலங்கை வால்தனம்...
கடந்த வாரம்தான் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்து முழுமையான போர் நிறுத்தம் குறித்தும், மனிதாபிமான குழுக்களை வன்னிக்கு அனுப்புவது குறித்தும் இலங்கை அரசுடன் பேசினர்.
ஆனால் இந்த இரு கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது. மேலும், இரு வெளியுறவு அமைச்சர்களிடமும், ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராபக்சே கடுகடுவென பேசியதாகவும் கூறப்பட்டது.
தமிழர் இனப்படுகொலை குறித்து மேற்கத்திய நாடுகள் கொடுத்து வரும் நெருக்கடியால் கடுப்பாகியுள்ள இலங்கை அரசு மேற்கத்திய நாடுகளை வாய்க்கு வந்தபடி வசை பாடி வருகிறது.
மறுபடியும் ஒரு வியட்நாமை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவையே இலங்கை அரசு எச்சரித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், இங்கிலாந்து எம்.பிக்கள் குழுவின் பயணத்தால் எந்த அளவுக்கு பலன் ஏற்படும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications