ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட மூ.மு.க. - கார் மீது தாக்குதல்
புதுக்கோட்டை: தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் காரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் ப.சிதம்பரம், ஆலங்குடி வட்டங்கச்சேரி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தை முடித்து விட்டு அவர் கிளம்பினார். ஆலங்குடி வடகாடு முக்கத்தில் சிதம்பரத்தின் கார் வந்த போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் திருவரங்குளம் ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அவரது காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
ஏன் காரை மறிக்கிறீர்கள் என்று சிதம்பரம் காரிலிருந்தபடி கேட்டபோது, எங்கள் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்தார். அவர் வருவதற்குள் நீங்கள் பேசி விட்டீர்கள். தலைவரை அவமானப்படுத்தி விட்டீர்கள். அவர் பேச முடியாமல் தி.மு.க.வினர் சதி செய்து விட்டார்கள் என்று கூறி கோஷம் போட்டார்கள்.
அப்போது சிலர் சாலையோரம் இருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். ஒருவர், சிதம்பரத்தின் காரை கையால் அடித்தார்.
உடனடியாக தலையிட்ட போலீஸார் மூமுகவினரை விலக்கி சிதம்பரத்தை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில் இருந்து வந்த மூமுக சமீபத்தில்தான் திமுக கூட்டணிக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications