Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை 'திருமங்கலமாக்க' முயற்சி-சாவ்லாவிடம் புகார்

Subscribe to Oneindia Tamil

Naveen with Quresh
சென்னை: ஆளும் கட்சியான திமுக பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் திருமங்கலம் ஸ்டைலில் தேர்தல் நடத்த முயல்வதாகவும், பெருமளவில் விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும் தேர்தல் ஆணையர்களிடம் புகார் கூறியுள்ளது.

தமிழகத்தில் மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி, சம்பத் ஆகியோர் வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று இரவு தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மற்றும் ஆணையர் குரேஷி ஆகியோர் சென்னை வந்து சேர்ந்தனர். இன்னொரு ஆணையரான சம்பத் இன்று காலை வந்தார்.

நேற்று இரவு வந்த நவீன் சாவ்லாவையும், குரேஷியையும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் சந்தானகிருஷ்ணன், ஜெயஸ்ரீ முரளீதரன் ஆகியோர் வரவேற்றார்கள்.

பின்னர் விமான நிலையத்திலேயே கிட்டத்தட்ட அரை மணி நேரம் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.

ஆயிரக்கணக்கில் குவிந்த புகார்கள்...

வழக்கமாக இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆணையர்களில் ஒருவர் வருவதுதான் வழக்கம். ஆனால் மொத்த தேர்தல் ஆணையர்களும் வருகை தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இதுவரை தமிழகத்திலிருந்து இந்த அளவுக்குப் புகார்கள் போனதில்லை என்று கூறும் அளவுக்கு ஆயிரக்ணக்கான புகார்கள் தேர்தல் ஆணையத்திற்குப் போயிருப்பதே.

எல்லாமே திமுக அரசின் விதி மீறல்கள், பிற கட்சியினர் மீதான பதில் புகார்கள்தான். குறிப்பாக மதுரை தொகுதியில் திமுகவினர் பெருமளவில் விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பது குறித்தும், வாக்காளர்களுக்கு சரமாரியாக பணம் தரப்படுவது குறித்தும், எதிர்க்கட்சியினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் பெருமளவிலான புகார்கள் போயுள்ளதாம்.

இப்படி பெருமளவில் புகார்கள் வருவது, உ.பி., பீகார் போன்ற வட மாநிலங்களில்தான் அதிகம் இருக்கும். ஆனால் தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதால், நேரடியாக 3 ஆணையர்களும் செல்ல முடிவானதாம்.

இன்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேர்தல் ஆணையர்களின் கூட்டம் நடைபெற்றது. முதலில் மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் நவீன் சாவ்லா உள்ளிட்ட 3 ஆணையர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடனும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து அரசியல் கட்சியினரின் புகார்களை நவீன் சாவ்லா பெற்றுக் கொண்டார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக என அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் புகார் மனுக்கள் தரப்பட்டன.

திமுக சார்பி்ல் வக்கீல் ஜோதி, அசம் முகம்மது ஜின்னா, சிவப்பிரகாசம், அதிமுக சார்பில் பொன்னையன், மனோஜ் பாண்டியன், டாக்டர் மைத்ரேயன், பாலகங்கா, சேகர் பாபு ஆகியோரும், காங்கிரஸ் சார்பில், கராத்தே தியாகராஜன், தாமோதரன், மக்பூல் ஜான், சேலம் பாலு ஆகியோரும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஆறுமுகம், சிவாவும், மதிமுக சார்பில் தேவதாஸ், சீமா பஷீர், ஜீவன், ராஜேந்திரன், மகரூப், சி.பி.ஐ. சார்பில் எஸ்.எஸ்.தியாகராஜன், ஏ.எம்.கோபு, ஸ்டாலின் குணசீலன், சிபிஎம் சார்பில் டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன், ஆறுமுகம் நயினார் ஆகியோர் புகார் மனுக்களை அளித்தனர்.

அதிமுக கூட்டணியினர் கொடுத்த அனைத்துப் புகார்களிலும் அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்களுக்குப் பணம் வழங்குதல், நடத்தை விதி மீறல் குறித்தே புகார்கள் இருந்தன.

விதிமுறை மீறல்களை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதேசமயம், திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, தேர்தலை நிறுத்த அதிமுக தரப்பு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அனைத்துப் புகார்களையும் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நடத்தை விதி்மீறல் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு நவீன் சாவ்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் இறுதி கட்ட வாக்காளர் பட்டியல்:

இதற்கிடையே சென்னையில் இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது.

சென்னையின் 3 மக்களவைத் தொகுதிகளையும் சேர்ந்த 73,953 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி மனு செய்துள்ளனர்.

இதில் 3,000 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டு தகுதியுள்ள 70,953 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பெயர்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் சென்னையின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+