நேபாள எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு
சில்குரி: நேபாளத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருவதாலும், அங்கிருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிடலாம் என்ற காரணத்தினாலும் நேபாள எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் பிரதமராக இருந்த பிரசந்தா, ராணுவ தளபதி ரூக்மங்கத் கத்வாலை பணி நீக்கம் செய்தார். ஆனால், கத்வால் விலக மறுத்துவிட்டதாகவும் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் பேசி ராணுவ புரட்சி ஏற்படுத்து போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அதிபர் ராம்பரன் யாதவ் அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் கத்வாலை தளபதியாக நியமித்தார். இதையடுத்து பிரசந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்திய அரசு நேபாள அதிபருக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை நேபாளத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை இந்தியா மறுத்துவிட்டது. தாங்கள் நேபாள விவகாரத்தில் தலையிடவில்லை என உறுதியாக கூறிவிட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் டாரிஜலிங் மாவட்ட எல்லைக்கு அருகில் நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே உள்ள 1752 கிமீ., தூர எல்லையை கண்காணித்து வரும் இந்தியாவின் சஸ்கஷ்த்ரா சீமா பால் பாதுகாப்பு படைக்கு முழு எச்சரிக்கையுடன் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அந்த படையின் 22வது பட்டாலியன் தலைவர் எஸ்.ஐ.சர்கார் கூறுகையில், எல்லை புறத்தில் அனைத்து சோதனைசாவடிகளும் உஷார் நிலையில் இருக்கின்றன. ரோந்து மற்றும் சோதனைகளை அதிகரித்துள்ளோம் என்றார்.
சஸ்கஷ்த்ரா சீமா பால் படையின் தலைவர் எம்.வி. கிருஷ்ணா ராவ் கூறுகையில், பாதுகாப்புக்காக 44 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நேபாள எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். தற்போது அதை மேலும் அதிகரித்துள்ளோம் என்றார்.
இந்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நேபாள எல்லை பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்தியாவுக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நுழையவிடாமல் தடுப்போம் என்றார்.